யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை (22.05.2025) பிற்பகல் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன், மாவட்டப் பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை, இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் முன்னெச்சரிக்கையாக டெங்கு நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டுப் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. பாடசாலைகளிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2. 2025 ஆம் ஆண்டு டெங்கு தாக்கத்தைக் கட்டுப்படுத்தப் பிரதேச செயலாளர் தமது பிரதேச செயலகங்களில் ஜீன் மாதம் முதல் 3 வது புதன்கிழமை பிற்பகல்-02.30 மணிக்கு டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நடாத்துவதுடன் கூட்டக் குறிப்பினை மாவட்டச் செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் கோரப்பட்டது.
3. கிராமமட்ட டெங்குக் குழுக்கூட்டத்தினை ஜீன் மாதம் முதல் 1வது, 2வது செவ்வாய்க்கிழமைகளில் நடாத்துவதற்கும் அது தொடர்பான கூட்டக்குறிப்பு பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடுமாறும் கோரப்பட்டது.
4. ஜீன்-01ஆம் திகதி முதல் முன்மாதிரியாக மாவட்ட செயலகம் மற்றும் பாடசாலைகளில் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனவும், அவ்வாறு தரம் பிரிக்காமல் காணப்படுமாயின் அதற்குரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய திணைக்களங்கள் கால அவகாசத்திற்கு அமைய, ஜீலை 1ஆம் திகதி முதல் இந் நடைமுறையைப் பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டது.
5. பிளாஸ்டிக், பொலித்தீனை கட்டுப்படுத்தல் தொடர்பான நடைமுறைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் பொதுமக்களுக்கு அது தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
6. கழிவுகளை வீதிகளில் கொட்டுவதைக் குறைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையினாலும், கோப்பாய் பிரதேச சபையினாலும் கண்காணிப்புக் கமரா (CC TV) பொருத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.