ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் யாழ்.பிராந்தியம் ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் கலைவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (01.06.2025) மாலை-05 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இளங் கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.இந்தக் கலைவிழாவில் தென்னிந்தியத் தொலைக்காட்சிப் புகழ் ஈழத்துப் பாடகர்கள் உட்படப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.மேற்படி கலைவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் மொத்தம் ஒன்பது பிராந்தியக் கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியமானது ஈழத்துக் கலைகளை சமூக ஆரோக்கியத்துக்கான மக்களுக்குரிய கலைகளாக மெருகேற்றி அதற்கூடாக மானுட சுதந்திரத்தையும், சமத்துவ நெறியையும் அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்துக்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.மனித மேம்பாட்டுக்கான குறித்த பயணத்தில் இசை நிகழ்வுகள், ஓவியக் கண்காட்சி, கலை தொடர்பான கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், பயிலரங்குகள், கலந்துரையாடல்கள், கூட்டுப் படிப்புகள், கவியரங்குகள், விவாத அரங்குகள், போன்றவற்றை நடாத்தி மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக் கலைஞர் ஒன்றியத்தின் நோக்கமாகும். கடந்த மாதம் ஒன்றியத்தின் கிளிநொச்சிப் பிராந்தியக் கலைவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் இன்று- 31 ஆம் திகதி ஒன்றியத்தின் திருகோணமலைப் பிராந்தியத்தின் புத்தாண்டுக் கலைவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. அடுத்த மாதம் மன்னார் பிராந்தியத்தில் பௌர்ணமிக் கலை விழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஜீன் மாதத் தொடக்கத்தில் நாடளாவிய ரீதியில் கவிதைப் போட்டியை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளையும் ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் முன்னெடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.