குப்பிழான் காளி கோவில் அலங்கார உற்சவம் ஆரம்பம்

'காளி கோவில்'  என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (30.05.2025) மாலை-06.30 மணியளவில் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பத்துத் தினங்கள் இவ் ஆலய அலங்கார உற்சவம் நடைபெறும்.

இரவு-08.15 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து காளி அம்பாள் அலங்கார நாயகியாகத் திருவீதி உலா வந்தார். இவ் ஆலய அலங்கார உற்சவத்தில் பத்தாம் நாளான அடுத்த மாதம்-08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணியளவில் அம்பாளுக்கு 108 சங்காபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும். மறுநாள்-09 ஆம்  திகதி திங்கட்கிழமை வைகாசி விசாகப் பொங்கல் உற்சவமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அலங்கார உற்சவக் கிரியைகள் யாவும் கிரியாகலாபமணி சிவஸ்ரீ.கி.வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெறுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.