ஈழத்துச் சித்தர் நல்லூர் தேரடிச் சித்தர் செல்லப்பா சுவாமிகளின் மாதாந்தக் குருபூசை நிகழ்வு இன்று சனிக்கிழமை (24.05.2025) காலை-09 மணி முதல் நல்லூரில் அமைந்துள்ள செல்லப்பா சுவாமிகளின் நினைவாலயத்தில் சைவப்பிரகாசப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அபிஷேக வழிபாடு, திருமுறை, நற்சிந்தனை ஓதுதலைத் தொடர்ந்து சைவப்பிரகாசப் பேரவையின் செயலாளர் வேலுப்பிள்ளை சிவகுருநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 'திருமுறையின் பெருமை' எனும் தலைப்பில் உலக சைவத்திருச் சபையின் இலங்கைக்கான தலைவர் கலாபூஷணம் சிவஸ்ரீ.கதிர் குமாரசுவாமி சுமுகலிங்கம் குருக்கள் கலந்து கொண்டு நீண்ட சிறப்புரை நிகழ்த்தினார்.
இவரது உரை குருபூசை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புரியும் படியாக அமைந்திருந்ததுடன் திருமுறை மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து சிவபுராணம் ஓதுதலுடன் செல்லப்பா சுவாமிகள் குருபூசை நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.