கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம்: பிரதமர் தலையீடு!

கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் பொலிஸ் குழு மற்றும் சிறுமியின் பெற்றோருடனான சந்திப்பு இன்று சனிக்கிழமை(10.03.2025) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால, பொலிஸ் விசாரணைக் குழு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்துப் பாரபட்சமற்ற, முறையான மற்றும் மிக விரைவான விசாரணையை நடத்துமாறு பிரதமர் பொலிஸ் விசாரணைக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் பதிவாகியது முதல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முறையாக இடம்பெற்றனவா? என்பது குறித்துக் கல்வி அமைச்சின் மூலம் உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் தலையிட வேண்டிய அரச நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிள்ளைக்கு நேர்மறையான பதில் வழங்கப்படுவதில்லை என அவதானிக்கப்பட்டுள்ளமையால் இப் பொறிமுறையைக் கண்காணித்து நெறிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சிறுவர்நல மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு பிரதமரால் நியமிக்கப்பட்டது.