கண் பார்வை அற்றவர்கள் பயன்படுத்தும் மேம்படுத்திய வெள்ளைப் பிரம்பைக் கண்டுபிடித்த வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எட்டாம் தர மாணவர்களான லின்டன் ஜெனிஸ் அறோன் அஜேய் மற்றும் திருச்செல்வம் செர்வின் ஆகியோர் வடக்குமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை நேற்றுத் திங்கட்கிழமை (23.06.2025) யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்துத் தமது புத்தாக்கம் தொடர்பில் தெரியப்படுத்தினர்.
கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைப் பிரம்பை இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டு பல்வேறுபட்ட வசதிகளை மேம்படுத்தி அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் இக் கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பானது எதிர்காலத்தில் சட்டவிதிமுறைகளுக்கு அமைய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் கண்பார்வையற்றவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
மாணவர்கள் இருவரையும் வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்தியதோடு இவ்வாறான புத்தாக்கக் கண்டுபிடிப்புக்கள் எமது மாணவர்கள் மத்தியிலிருந்து இன்னும் பல தோற்றம் பெறவேண்டும். அவை எமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். மாணவர்களின் கண்டுபிடித்த புத்தாக்கத்தை மேம்படுத்திக் கண்பார்வை அற்றவர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்தார்.
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய மாணவர்களின் கண்டுபிடிப்பைப் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு உதவத் தயார் எனக் கண்சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மு.மலரவன் தெரிவித்தார்.
கண்டுபிடிக்கபட்ட கருவியில் இன்னும் சிறிய மேம்படுத்த வேண்டிய செயல்பாடு உள்ளது எனவும், அதனை நிவர்த்தி செய்து பயன்பாட்டிற்கு வந்தால் விழிப்புலன் அற்றவர்களுக்கு மிகவும் உதவியாக அமையும் எனவும் இயலாமைக்கு உள்ளானவர்களுக்கான தேசிய சபை அங்கத்தவர் வெ.சுப்பிரமணியம் தெரிவித்தார்.