செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் எனும் தன்னார்வ இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை (23.06.2025) முற்பகல் யாழ் செம்மணி வளைவுப் பகுதியில் ஆரம்பமான அணையா விளக்குப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (24.06.2025) இரண்டாவது நாளாகவும் இரவு, பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாளை புதன்கிழமை (25.06.2025) ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் போராட்டம் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் வடக்கு- கிழக்கிலிருந்து பெருமளவானோர் திரண்டு வந்து கலந்து கொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய மாபெரும் போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக வடமராட்சி கிழக்கிலிருந்து யாழ்.செம்மணிக்குப் போக்குவரத்து ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வவுனியாவிலிருந்து நாளை காலை-07 மணியளவில் யாழ். செம்மணி நோக்கிப் பேருந்து புறப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.