யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக தமிழ்த்தேசியப் பேரவையைச் சேர்ந்த (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) தவமலர் சுரேந்திரநாதன் தெரிவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம் இன்று புதன்கிழமை (18.06.2025) காலை-08.30 மணியளவில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.
மொத்தமாக 16 உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகர சபையில் 2025 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 7 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.
பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமையத் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பகிரங்கமாக இடம்பெற்ற நிலையில் தவிசாளர் பதவிக்காகத் தமிழ்த்தேசியப் பேரவை (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) சார்பில் போட்டியிட்ட தவமலர் சுரேந்திர நாதனுக்கு 7 பேரும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட மகாலிங்கம் மயூரனுக்கு 6 பேரும் ஆதரவு வழங்கினர். தேசியமக்கள் சக்தியைச் சேர்ந்த 3 பேரும் நடுநிலை வகித்தனர். உபதவிசாளராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாகதம்பி பத்மநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.கிருபா கிரிதரன், மனித உரிமைச் செயற்பாட்டாளர் டொமினிக் பிறேமானந், கரவெட்டிப் பிரதேச சபையின் உப தவிசாளர் தியாகராசா தயாபரன், கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நகராட்சி சபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.