ஈரான்- இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது. அந்தப் பயங்கரவாதப் பிராந்தியத்துக்கு எதிராக நாம் பலத்துடன் இயங்க வேண்டும். சமரசத்துக்கு வாய்ப்பில்லை என ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.
ஒரேநாளில் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே மூன்று மொழிகளில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது, ஈரானின் உச்சப்பட்சத் தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார்? என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால், அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரைக் கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால், பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதேபோன்று இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளதாவது, போர்க் குற்றங்களைச் செய்வதற்காகவும், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்காகவும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதே பாதையை எடுத்த ஈரானுக்கு அண்டை நாட்டிலிருந்த சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது? என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மிரட்டல்களைத் தொடர்ந்தே ஈரானின் உச்சத் தலைவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.