பத்தாம் நாளில் சிறப்பிக்கப்பட்ட குப்பிழான் காளி கோவில் உற்சவம்


'காளி கோவில்'  என அழைக்கப்படும் குப்பிழான் வடபத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் பத்தாம் நாள் உற்சவம் அண்மையில் மிகவும் பக்திபூர்வமாகவும், சிறப்புறவும் இடம்பெற்றது.

108 சங்காபிஷேகம், விசேட பூசை வழிபாடுகள், வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, மாதர்கள் கற்பூரச் சட்டிகள் ஏந்தி முன்னே வர, அடியவர்கள் புடைசூழக் காளி அம்பாள் சிங்க வாகனத்தில் சிங்காரமாய் வீதி உலா வரும் திருக்காட்சியும் நடைபெற்றது. காளி அம்பாள் வீதி உலாத் திருக்காட்சி இடம்பெற்ற போது அடியவர்களின் தெய்வீகப் பஜனை நிகழ்வு பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.  அன்னதானமும் நடைபெற்றது.  

இதேவேளை, சிவஸ்ரீ கி.வைத்தீஸ்வரக் குருக்கள் தலைமையில் கிரியை மற்றும் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.